என்னைப் பற்றி

எனது படம்
கனவுகளை விட நிஜங்களில் வாழ ஆசை...

புதன், 7 பிப்ரவரி, 2018

தோல்விகளால் என் வாழ்க்கை

கடந்து வந்த என் வாழ்க்கை.....
திரும்பி பார்க்கிறேன்...

பெரிதாய் ஒன்றும் இல்லை...
தோல்வி மட்டுமே
என் வரலாறாய்
மிஞ்சி நிற்கிறது.....

தானியங்கி (Automobile)பொறியியல் படித்து....

தன்னை கூட இயக்க தெரியாதவனாய் நான்....
என் கல்வி - ஏட்டு சுரக்காய்
கறிக்கு உதவவில்லை....

கவிஞனாய்...

காதல் கல்வெட்டுகளில்
தடம் பதிக்க நினைத்து
தடமின்றி போனேன்....
தாங்கி பிடிக்க
வேண்டிய நேரத்தில்
தந்தை தவறி போனதால்....

நடிகனாய்.....

திறமை என்பதெல்லாம்
வாய்ப்புகள்
கிடைத்த பின்
வளர்த்து கொள்ள
வேண்டியது...

நீ யார் ?
உனக்கு
நான்
ஏன் வாய்ப்பு தர வேண்டும் ?...
என கேட்ட பின்பு தான் தெரிந்தது
பழகியவனெல்லாம் நண்பன் அல்ல என்பது....

திரைபட இயக்குனர் ....

உனக்கேன்
இந்த வேலை
என சொல்லியதற்காகவே
நேசித்த தொழில்....

பணம் என்ற ஒன்று
இல்லை என்றால்
எத்தனை சுகமாய் இருக்கும்
என்பது
சக தொழிலாளி
சம்பளம் வாங்கும் போது
வேடிக்கை பார்க்கும்
உதவி இயக்குனராய்
என் கண்ணீர்
கதறிய போது
தோன்றியது.....

இயக்குனராய்
வெற்றி பெறுவதெல்லாம்
இறைவன் நினைத்தால் மட்டுமே
என்பதே நிஜம்...
இது புரிய
இழந்தவை
எத்தனை? ....

உலகில்
எல்லாம்
முன்பே தெரிந்தால்
எந்த
வேலை செய்யவும்
ஒருவனும் கிடைக்க மாட்டார்கள் அல்லவா?

நம்மால் வாழ்பவர்களை
பார்க்கும் போது...
நாம் ஏன்
வாழாமல் போனோம்
என்பது புரிகிறது
நம்மையே இழந்த பின்....

இன்று
என்னோடு
பயணிக்கும்
என் நண்பர்கள்
சந்தோசபட
என்னிடம்
நிறைய இருக்கிறது....
ஆம்...
என் தோல்விகள்
அவர்களை
நிச்சயம்
சந்தோசபட வைக்கும்...

"நல்லா படிக்கிறவன்னா
பேர் எடுத்த...
உனக்கு
நல்லா வேணும்"....
என்று
அவர்கள் சொல்வது
நல்லாவே கேட்கிறது....

ஜோதிடராய்...

வாழ்க்கையில்
நான்
நினைத்ததெல்லாம்
நடந்த போது
நானும்
நாத்தீகன் தான்....

இன்று
நம்பிக்கையோடு
உயிர் வாழ்கிறேன் என்றால்
காரணம்-ஜோதிட கணிதம்...

நாம் நினைப்பது நடக்கவில்லை என்றாலும்
நடப்பதை நேசிக்க கற்று தந்தது ஜோதிடம்...
நம்மை திடமாக்க....

தோற்று போனவர்களை
தேற்ற
என்னிடம்
இருப்பவை எல்லாம்
நான் இழந்தவைகள் தான்....

"உங்களுக்கென்ன" என்று
என்னை
உயர்த்தியும்,தாழ்த்தியும்
சொல்லும் போதெல்லலாம்
வெளியே சிரித்து
உள்ளே
நிறையவே அழுகிறேன்
என் இனிய எதிரிகளே....
என் இலக்கை
இன்னும்
அடைய முடியவில்லை என்பதால்...

பணம் செய்ய தெரிந்தவன் மட்டுமே
இங்கே மதிக்கப்படும் போது...
மனம் பேசுவதெல்லாம்
இங்குள்ள மனிதர்களுக்கு
எங்கே புரிய போகிறது ?...

வெற்றிகளில் சிலருக்கு வாழ்க்கை ....
ஏனோ தோல்விகளில் என் வரலாறு ...

பிறர் நம்மை வாழ்த்தும்
வாழ்த்துகள் மட்டும்
வாழ்க்கையை தருவதில்லை...

வாழ்க்கை
நாம்
எதிர்பாராததை
எதிர்பாராத நேரத்தில் தந்து
நம்மை அதிர வைக்கும்....

வாழ வேண்டிய வயதில்
துன்பங்களை தந்து விட்டு...
இனி தருவதில்
என்ன பயன்?

வேண்டுதல் நிறைவேற்றிய
இறைவனுக்கு
வேண்டுமானால்
இன்பம் ஏற்படலாம்....
பக்தனாய்
வேண்டுகிறேன்...
"பசிக்கும் போது
உணவு தாருங்கள்".....

என்னை
தோல்வியாளனாய்
பார்க்க விரும்பும்
என் அன்புக்குரியவர்களே....
நான் வாழ்ந்ததற்கான-எனக்கான
சில தடயங்களை
விட்டு தான் செல்கிறேன்...
உங்கள்
உதவியால்....

எதிரியை விட
நம் மேல் அக்கறை
கொள்பவர்
உலகில்
யாரும் இருந்து விட முடியாது....

சராசரி வாழ்க்கை வாழ
நாம் நம்மை 
தயார் செய்யும் போதெல்லாம்
நம்மை
உசுப்பேற்றுவது போல்...

ஒரு மாதம் ஊரில் இருந்தால்
"சென்னைக்கு போறதில்லை போல"
"வந்தாச்சா ஊருக்கு"
"அப்பவே தெரியும்"என
நக்கல் பேச்சும்
நையாண்டி பார்வையும்
முகஸ்துதி செய்யும்
அன்பானவர்கள்..
குத்தி காட்டி
பேசும் போதெல்லாம்

சினிமா என்ற
ஒற்றை இலட்சியத்திற்காய்
தொலைக்கும்
தன் மானத்தை மீண்டும்
யார் தருவது?...

உணவின்றி
ஒரு வேளை
இருக்க முடியாதவர்களுக்கு
தெரியாது...
சினிமா
ஒரு பெருந்தவம் என்பது...
வரம் எதிர் பார்த்து
சாபம் பெற்று
செல்பவர்கள் தான்
இங்கு அதிகம்.....

இறைவா !
கலைஞன் 
ஒருவனை
படைக்கும் போது மட்டும்
ஒரு வேண்டுகோள்....
அவனுக்கு மட்டுமின்றி
அவனை சார்ந்தவர்களையும்
பசி அற்றவர்களாக
படைத்து விடு ....

ஏனென்றால்
தன் பசியை
அடக்க தெரிந்த
கலைஞனுக்கு
தன்னுடன்
இருப்பவர்களின்
பசியை
அடக்க வழி தெரிவதில்லை...

கருத்துகள் இல்லை: